2012-01-07 13:54:10

2011ம் ஆண்டில் உலகில் 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்


சன.07,2012. உலகில், 2011ம் ஆண்டில் 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மெக்சிகோ நாட்டில் அதிகம் எனவும் IPI என்ற வியன்னாவை மையமாகக் கொண்ட அனைத்துலக பத்திரிகை அமைப்பு (International Press Institute) அறிவித்தது.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறும் IPI அமைப்பு, 2009ம் ஆண்டில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என அறிவித்தது.
கடந்த 2011ம் ஆண்டில் மெக்சிகோவில் மட்டும் 10, அதற்கடுத்து ஈராக்கில் 9, அந்நாட்டைத் தொடர்ந்து ஹொண்டூராஸ், பாகிஸ்தான், ஏமன், லிபியா, பிரேசில் என நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது இவ்வமைப்பு.
இத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தாலும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் எனப் பார்த்தால் அவை அபூர்வமாகவே உள்ளது என்றும் IPI அமைப்பு கூறியது.







All the contents on this site are copyrighted ©.