இந்தியாவில் பரவிவரும் வாடகைத் தாய்மை என்ற எண்ணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள்
எதிர்ப்பு
சன.05,2012. இயற்கைக்கு முரணான செயற்கை முறைகளில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதை கத்தோலிக்கத்
திருஅவை ஏற்றுக் கொள்ளாது என்று நன்னெறி இறையியலாளரான அருள்தந்தை சூசை ஆரோக்கியசாமி கூறினார். மனைவி
அல்லாமல் மற்றொரு பெண்ணின் உதரத்தில் ஆணின் உயிரணுக்களை செலுத்தி, குழந்தையை உருவாக்கும்
வாடகைத்தாய் என்ற எண்ணம் இந்தியாவில் பரவி வருவதற்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாடகைத் தாய்மை என்பது இயற்கைக்கு முரணானது என்றும்,
விவிலியப் படிப்பினைகளுக்கு எதிரானது என்றும் அருள்தந்தை ஆரோக்கியசாமி எடுத்துரைத்தார். வாடகைத்
தாய்மை என்பது நன்னெறிக்கு முரணானது என்பது மட்டுமல்ல, அதனால் பல்வேறு உளநல ரீதியான பிரச்சனைகளும்
உருவாகும் என்று மனநல மருத்துவர் Anita Chauhan கூறினார். இயற்கையில் கருவுற்று குழந்தை
பிறப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முறையையும் இஸ்லாம் நியதிகள் ஏற்றுக் கொள்ளாது
என்று இந்திய இஸ்லாம் தலைமைப் போதகர் Umer Ahmed Ilyasi கூறினார். உடலையும், மனதையும்
பாதிக்கும் இந்த செயற்கை முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குழந்தையற்ற பெற்றோர் அனாதைக்
குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று இஸ்லாம் தலைவர் Ahmed Ilyasi பரிந்துரைத்தார். வாடகைத்
தாய்மை என்பது இந்துமத கோட்பாடுகளிலும் ஐயங்களை உருவாக்கும் ஒரு போக்கு என்று இராமகிருஷ்ணா
அறக்கட்டளையைச் சார்ந்த சுவாமி சாந்தாத்மானந்த் கூறியதுடன், அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கும்
முறை வரவேற்கப்பட வேண்டியதொன்று என்ற பரிந்துரையை அவரும் வலியுறுத்தினார்.