2012-01-04 15:35:34

சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தி முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்


சன.04,2012. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தியினால் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்று கல்கத்தா உயர்மறைமாவட்ட சமுதாயப் பணி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Reginald Fernandes கூறினார்.
கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமுதாயப் பணி மையம், மேற்கு வங்கத்தில் சுற்றுச்சூழலை அழிக்காத வண்ணம் சக்தியை உருவாக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள Kalidaherpota என்ற கிராமத்தில் மின்சார வசதிகள் இல்லாததால், அங்குள்ள மக்களின் வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது என்று கூறிய அருள்தந்தை Fernandes, அந்த கிராமத்தில் சமுதாயப் பணி மையம் மேற்கொண்ட முயற்சிகளை ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விளக்கிக் கூறினார்.
சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளால் அக்கிராமத்து மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், சிறப்பாக, அக்கிராமத்து குழந்தைகள் கல்வியில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் அருள்தந்தை Fernandes எடுத்துரைத்தார்.
கல்கத்தா சமுதாயப் பணி மையத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் சென்று சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளை உருவாக்கும் வழிகளை கற்பித்து வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.