குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து
கர்தினால் Seán Brady
சன.04,2012. குடும்பங்களில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்கள் சொல்வதை பெற்றோர்
செவிமடுத்தால், பல தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று அயர்லாந்து கர்தினால் Seán Brady
கூறினார். புத்தாண்டு நாளன்று உலக அமைதிக்கென திருத்தந்தை வழங்கிய செய்தியை அடிப்படையாகக்
கொண்டு தன் புத்தாண்டு மறையுரையை வழங்கிய அயர்லாந்து தலைமை ஆயர் கர்தினால் Brady, அயர்லாந்தில்
தற்கொலைகள் மூலம் இளையோரை அதிக அளவில் நாம் இழக்கிறோம் என்ற எச்சரிக்கையை விடுத்தார். பணியிடம்,
சமுதாயம், குடும்பம் என்ற பல சூழல்களில் பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்கும் இளையோரின்
உள்ளத்து ஏக்கங்களைக் கேட்பதற்கு வயது முதிர்ந்தவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று
கர்தினால் Brady வலியுறுத்திக் கூறினார். 2012ம் ஆண்டு நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள்
மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பலர் இருக்கும்போது,
இவ்வாண்டு டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் மீது
நமது கவனமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று கர்தினால் Brady தன் மறையுரையில்
குறிப்பிட்டார்.