மத வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம்
- இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை
சன.03,2012. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று அமைவது எந்த ஒரு குடியரசுக்கும்
மிகவும் முக்கியம் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது. புது டில்லியில்
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத வன்முறைகளைக் கட்டுப்படுத்தும்
சட்ட வரைவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட
கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு கூறியது. சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் நாட்டு
ஆலோசனை அவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, நாட்டின் எந்த மாநிலத்திலும்
நடைபெறும் மத வன்முறைகளை, மாநில அரசுகளின் அழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு கட்டுப்படுத்த
தேவையான அதிகாரம் வழங்கும் அம்சங்களைப் பரிந்துரைக்கிறது. 2003ம் ஆண்டு குஜராத்தில்
இஸ்லாமியருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளும் 2008ம் ஆண்டில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு
எதிராக நடந்த வன்முறைகளும் இந்த சட்ட வரைவைப் பரிந்துரைக்க காரணமாய் இருந்தன என்று சொல்லப்படுகிறது. எதிர்கட்சிகளும்,
மற்ற சமுதாய அமைப்புக்களும் இந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.