ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய சிந்தனைகள்
சன.02,2012. ஒவ்வோர் ஆண்டும் நம்மைக் கடந்து செல்லும்போது, மறுமுறை வரமுடியாத வண்ணம்
காலம் கடந்துவிட்டதே என்ற கவலை நம்மைச் சூழ்ந்தாலும், கடவுளின் அன்பில் நாம் வாழ்கிறோம்
என்ற உறுதி அனைத்து கவலைகளையும் போக்கிவிடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். சனிக்கிழமை
மாலை “Te Deum” என்ற நன்றிப்பாடல் இசைக்கும் ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டை
நடத்தியத் திருத்தந்தை, கடந்து செல்லும் ஆண்டையும், எதிர்வரும் ஆண்டையும் குறித்து தன்
சிந்தனைகளை மறையுரையாக வழங்கினார். நிலையற்ற வாழ்வை நினைவுறுத்தும் காலத்தைப் பற்றி
சிந்திக்க புதிய ஆண்டின் வாசலில் இருக்கும் நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று
சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நிலையான கடவுளின் முகத்தைக் காணும்போது, காலத்தின் நிலையாமை
பற்றிய கவலைகள் நம்மிடம் இருந்து விடை பெறுகின்றன என்று தெளிவுபடுத்தினார். “Te Deum”
என்று நாம் பாடும் இந்தப் பாரம்பரியப் பாடல் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்ட பல
கோடி மக்கள் பல நூற்றாண்டுகளாய் பாடி வந்த ஒரு பாடல் என்பதை கூறியத் திருத்தந்தை, இப்பாடலைப்
பாடுவதன் மூலம் நமது நன்றியை இறைவனுக்குக் கூறுவதுடன், நம் வாழ்வையும் அவர் பராமரிப்பில்
ஒப்படைக்கிறோம் என்பதை எடுத்துரைத்தார்.