கிறிஸ்மஸ் நாளன்று 'பிரேம் நிவாஸ்' இல்லத்தைப் பார்வையிட்ட
கர்தினால் மால்கம் இரஞ்சித்
டிச.26,2011. அண்மையில் இலங்கை அரசின் தவறான குற்றச் சாட்டிற்கு உள்ளான 'பிரேம் நிவாஸ்'
அன்னை தெரேசா பிறரன்புச் சகோதரிகள் இல்லத்தை கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்
அவர்களும், இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர் அதிகாரி அசோக் காந்தாவும் கிறிஸ்மஸ் நாளன்று
சென்று பார்வையிட்டனர். இவ்வில்லத்தில் பிறரன்புச் சகோதரிகளால் பராமரிக்கப்படும்
குழந்தைகளையும், மற்றவர்களையும் சென்று பார்வையிட்ட இவ்விரு தலைவர்களும், அக்குழந்தைகள்
வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். ஏழைக் குழந்தைகளுடன் நேரத்தைச்
செலவிட்ட கர்தினால் இரஞ்சித்தும், இந்திய உயர் அதிகாரி காந்தாவும் அவர்களுடன் உரையாடியதாக
கொழும்பு உயர்மரைமாவட்டம் வெளியிட்ட செய்தி கூறுகிறது. குழந்தைகளை அயல் நாட்டவருக்கு
விற்க முயன்றார் என்ற தவறான குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டு,
பின் நீதி மன்ற விசாரணையில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட
அருள் சகோதரி மேரி எலிசா, மற்றும் அச்சபையின் இலங்கை மாநிலத் தலைவி அருள்சகோதரி Johannes
ஆகியோரையும், ஏனைய சகோதரிகளையும் இவ்விரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர்.