காயப்பட்டுள்ள லிபியா நாட்டுக்கு, அமைதியின் செய்தியை இந்த கிறிஸ்மஸ் கொண்டு வரவேண்டும்
- ஆயர் மார்த்தினெல்லி
டிச.23,2011. வன்முறைகளால் காயப்பட்டுள்ள லிபியா நாட்டுக்கு, அமைதியின் செய்தியை இந்த
கிறிஸ்மஸ் கொண்டு வரவேண்டும் என்று Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி
இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார். லிபியாவின் முன்னாள் அரசுத்தலைவர் கடாபி குடும்பத்திற்கு
விசுவாசமாய் இருப்பவர்களுக்கும் அவர்களது எதிரிகளுக்கும் இடையே அவ்வப்போது வன்முறையான
மோதல்கள் நடைபெற்று வருவதாக ஆயர் மார்த்தினெல்லி ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார். லிபியா
போரின்போது அந்த நாட்டை விட்டு வெளியேறாமல் தங்கி மருத்துவ உதவிகள் செய்து வந்த பிலிப்பின்ஸ்
நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை இவ்வியாழனன்று Misurata
என்ற இடத்தில் ஆயர் மார்த்தினெல்லி சந்தித்தார் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. கடாபியின்
மரணத்திற்குப் பிறகு அந்நாட்டில் நிலவி வந்த வன்முறைகள் பெரும்பாலும் குறைந்திருந்தாலும்,
பாதுகாப்பு கருதி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பிற்பகலில் நடத்தி முடிக்க தலத்திருச்சபை
தீர்மானித்திருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி எடுத்துரைத்தார்.