வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் மாற்றங்கள்
உருவாக சரியான தருணம் உருவாகியுள்ளது
டிச.21,2011. வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் குடியரசை நிறுவுவதற்கும்,
மனித உரிமைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பல வன்முறைகளை நிறுத்துவதற்கும் சரியான தருணம்
உருவாகியுள்ளது என்று உலகின் பல நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, மனித உரிமை ஆர்வலர்களும்
கூறி வருகின்றனர். மரணமடைந்த வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-ilக்கு அடுத்து பொறுபேற்றுள்ள
அவரது மகன் Kim Jong-un, அந்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும் வாய்ப்பைப்
பெற்றுள்ளார் என்று வட கொரியாவில் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உலகளவில் உருவாகியுள்ள
ICNK என்ற அமைப்பு இச்செவ்வாயன்று இலண்டனில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது. பல
வழிகளிலும் உலக நாடுகளுடன் தொடர்பின்றி மூடப்பட்டுள்ள அந்நாட்டில் நிகழும் மாற்றங்களை
கண்காணிக்க பன்னாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ICNK தலைவர் Souhayr
Belhassen செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது உருவாகியுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,
வட கொரிய நாட்டில் மாற்றங்களை உருவாக்க உலக நாடுகளும், பன்னாட்டு அமைப்புக்களும் வற்புறுத்த
வேண்டும் என்று அகில உலக கிறிஸ்தவ ஒருமைப்பாடு அமைப்பின் தலைமை இயக்குனர் Mervyn King
கூறினார்.