ஈராக் நாட்டைப் பொறுத்தவரை அருளாளர் இரண்டாம் ஜான்பால் சொன்னது அனைத்தும் பலித்து
விட்டது
டிச.21,2011. வன்முறைக்குப் பதில் அன்பு வழியைக் கடைபிடியுங்கள் என்று திருத்தந்தை அருளாளர்
இரண்டாம் ஜான்பால் கேட்டுக் கொண்டதை உலக அரசுகள் கடைபிடித்திருந்தால் ஈராக்கில் தற்போது
இவ்வளவு தூரம் நிலையற்ற தன்மை உருவாகி இருக்காது என்று ஈராக் நாட்டைச் சேர்ந்த குரு ஒருவர்
கூறினார். ஈராக் நாட்டை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் இச்சூழலில், அந்நாட்டில்
இன்னும் வன்முறையின் தாக்கங்கள் பெருமளவு உள்ளன என்று ஈராக் நாட்டில் பணி புரியும் அருள்பணியாளர்
Firas Behnam Benoka, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அமெரிக்கப்
படைகள் ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, அதற்கு தன் எதிர்ப்பைக் கூறி, அந்த நாட்டின்
பிரச்சனைகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அருளாளர் ஜான்பால் கேட்டுக்
கொண்டார். ஈராக்கில் பல ஆண்டுகளாய் வன்முறையில் வாழ்ந்து வரும் அம்மக்களுக்கு இப்போர்
மேலும் பல வன்முறைகளை உருவாக்கும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் சுட்டிக் காட்டி
வந்தார். அருளாளர் சொன்னது அனைத்தும் பலித்து விட்டது என்றும், ஒன்பது ஆண்டுகள் ஈராக்கில்
நடைபெற்ற போரினால் 150,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், இப்போரின் ஒரு முக்கிய
விளைவாக, கிறிஸ்தவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய கிழக்கு நலவாழ்வு
கத்தோலிக்கக் கழகத்தின் உதவித் தலைவர் Michael La Civita கூறினார்.