வேலை தொடர்பாக பிரிந்து வாழ்வதால் திருமணவாழ்வில் இடம்பெறும் பெரும்பாதிப்புகள் குறித்து
இந்தோனேசிய திருச்சபை
டிச.20,2011. இந்தோனேசிய கத்தோலிக்கத் தம்பதியர் வெளிநாட்டு வேலை தொடர்பாக பிரிந்து வாழ்வதால்
திருமண வாழ்வில் இடம்பெறும் பெரும்பாதிப்புகள் குறித்து அந்நாட்டு தலத்திருச்சபை கவலையை
வெளியிட்டுள்ளது. குடியேற்றத்தால் திருமண வாழ்வில் இடம்பெறும் பாதிப்புகள் தற்போது
மிகவும் அதிகமாகவும், கவலைக்குரியதாகவும் இருப்பதாக உரைத்த இந்தோனேசிய அட்டம்புவா மறைமாவட்டத்தின்
குடும்பஅவைத் தலைவர் குரு Leonardus Edel Asuk, பொருளாதார நெருக்கடிக்குள் மனைவியையும்
குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடுகளில் குடியேறும் கணவர்களால் குடும்பங்கள்
பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்றார். கத்தோலிக்கத் தம்பதியருக்கு கல்வி மதிப்பீடுகள்
குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய குரு, கத்தோலிக்கத் தம்பதியருக்கு
ஆலோசனைகள் வழங்கி, வெளிநாட்டு வேலைகளால் பிரிந்திருந்து கிடைக்கும் நன்மைகளைவிட உள்நாட்டிலேயே
இணைந்திருந்து பணியாற்றுவது அதிக நன்மை தருவதாக இருக்கும் என்பதைத் தலத்திருச்சபை வலியுறுத்திக்
கூறிவருவதாகத் தெரிவித்தார்.