2011-12-19 15:49:03

திருத்தந்தையின் மூவேளை செப உரை


டிச.19,2011. அன்னை மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டதை மையமாகக் கொண்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தியானிக்கையில் அன்னை மரியின் கன்னிமை குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.அன்னை மரியாள் கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைக் கருத்தாங்கினார் என்ற திருத்தந்தை, கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு எம்மானுவேல் என்று பெயரிடுவர் என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.
இந்த பழமையான இறைவாக்கு அன்னைமரியில் இயேசு உடலெடுத்ததில் நிறைவேறினாலும், இங்கு மனிதனாகக் கருவில் வளர்ந்தது இறைவனே எனபதையும், மரியின் கன்னிமை மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை நமக்கு ஓர் உறுதிப்பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பில் 'இது எங்கனம் ஆகும்' என அன்னை மரி கேள்வி எழுப்பியது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல, மாறாக, இறைவிருப்பத்தை மேலும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.