சிறைக் கைதிகளைச் சென்று சந்தித்து உரையாடினார் பாப்பிறை
டிச.19,2011. குற்றவாளிகளும் மனிதர்களே, அவர்களும் மதிப்புடனும் மாண்புடனும் நடத்தப்பட
வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உரோம் நகரின் ரெபிபியா
சிறைக்கு இஞ்ஞாயிறன்று சென்று, சிறைக்கைதிகளைச் சந்தித்த பாப்பிறை, தவறை சரி செய்வது
மட்டும் நீதியாகாது, மாறாக அது கருணையையும் உள்ளடக்கியது என்று கூறியதோடு, சிறைகளில்
சீர்திருத்தங்களைக் கொணருமாறு இத்தாலிய அரசுக்கும் அழைப்பு விடுத்தார். சிறையில்
உள்ளக் கோவிலில் ஏறத்தாழ 300 ஆண், பெண் சிறைக் கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை, அவர்களைத்
தான் அன்பு கூர்வதாகவும் அவர்களுக்காகச் செபிப்பதாகவும் கூறினார்.