2011-12-17 15:20:29

இணையதளத்தில் சிறார் பாலியல் குற்றச்செயல் தொடர்பாக 112 பேர் கைது


டிச.17,2011. சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்துவது குறித்த ஒளி-ஒலிப் படக்காட்சிகளை இணையதளம் வழியாக பரிமாறிக்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை இந்தக் குற்றச்செயல் தொடர்பாக, 270 பேரை ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் கண்டுபிடித்துள்ளது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பான மிக மோசமான ஒளி-ஒலிப் படக்காட்சிகளைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ள யூரோபோல், பச்சிளம் குழந்தைகளும், இளம் சிறாரும் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவதை இவை காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்காத புதிய வலையமைப்புக்களைத் தாங்கள் கண்டுபிடித்ததாகவும், இந்தக் குற்றமிழைத்தவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தித் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த வீடியோக்களை உலக அளவில் பகிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் யூரோபோல் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.