2011-12-14 15:05:25

கிறிஸ்மஸ் விழா காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரப்பட வேண்டும் - அகில உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர்


டிச.14,2011. பாதுகாப்பற்றச் சூழலில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வருகிற கிறிஸ்மஸ் விழா காலங்களில் இன்னும் அதிக பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று அகில உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.
கடந்த வாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து சஜன் ஜார்ஜ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
வன்முறையில் ஈடுபடுபவர்களைச் சட்டமும், காவல் துறையும் தண்டிக்காமல் விடுவதால், இத்தாக்குதல்களில் ஈடுபடும் அடிப்படை வாதக் குழுக்கள் மேலும் மேலும் துணிவு கொள்கின்றனர் என்று கூறிய ஜார்ஜ், இதுவரை இவ்வன்முறை நிகழ்வுகளில் கிறிஸ்தவர்களே பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளது இந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பாதுகாப்பற்ற நிலையைத் தெளிவாக்குகிறது என்று சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கி வரும் இவ்வேளையில் கிறிஸ்தவர்களுக்கும், அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு தந்தால் மட்டுமே கிறிஸ்தவர்கள் இவ்விழாவை அமைதியான முறையில் கொண்டாட முடியும் என்று சஜன் ஜார்ஜ் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.