குடியேற்றதாரரில் கிறிஸ்துவைக் காணுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஆயர்கள் அழைப்பு
டிச.13,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இலத்தீன் அமெரிக்க குடியேற்றதாரர் அந்நாட்டிற்குச்
செய்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்தக் குடியேற்றதாரரில் கிறிஸ்துவைக்
காணுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு
ஆயர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 33 மறைமாவட்டங்களைத் தலைமை ஏற்று வழிநடத்தும்,
இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆயர்கள் குவாதாலூப்பே அன்னை மரியா விழாவான
இத்திங்களன்று “குடியேற்றதாரருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் வெளியிட்ட கடிதத்தில்
இவ்வாறு விண்ணப்பி்த்துள்ளனர். குடியேற்றதாரர் அனைத்து அமெரிக்கர்களிடமிருந்து நன்றியைப்
பெறத் தகுதியுள்ளவர்கள் என்றுரைக்கும் அக்கடிதம், அம்மக்களை நசுக்கும் சக்திகள் கண்டிக்கப்பட
வேண்டியவை என்று வன்மையாய்ச் சாடியுள்ளது. இம்மக்கள் தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக
எதிர்கொள்ளும் துன்பங்களைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும் உரைத்துள்ள ஆயர்கள், இவர்கள்
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நன்மைகள் செய்தாலும், அந்நாட்டின் தற்போதைய குடியேற்றதாரர்
சட்டங்களை அவர்கள் மீறுவதாக இருப்பதால், குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்றும்
கவலை தெரிவித்துள்ளனர். லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் ஹோசே கோமஸ், சான் அந்தோணியோ பேராயர்
Gustavo Garcia-Siller உட்பட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையில் முக்கிய பொறுப்பிலுள்ள
ஆயர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.