வளரும் நாடுகள் பன்வலை அமைப்புக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து –
ஐ. நா.
டிச.10,2011. வளரும் நாடுகள் பன்வலை அமைப்புக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தை
எதிர்நோக்குகின்றன என்று இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தலைமையில் நடந்த கூட்டமொன்றில்
எச்சரிக்கப்பட்டது. பன்வலை அமைப்பு தொடர்பானக் குற்றங்களை தேசிய மற்றும் சர்வதேச
அளவில் எதிர்நோக்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்கென இடம் பெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டது. நாட்டின்
உள்கட்டமைப்பு, வங்கி அமைப்பு, தேசிய நலவாழ்வு அமைப்புகள், முக்கியமான அரசு மற்றும் தொழிற்சாலை
விபரங்கள், சேவைகள் போன்றவைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் பொருளாதாரத்தில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்து கின்றன என்று ஐ.நா.பொருளாதார மற்றும் சமூக அவைத் தலைவர் Lazarous
Kapambwe இக்கூட்டத்தில் கூறினார். இந்த வகையான தாக்குதல்கள் வளரும் நாடுகளின் முழு
வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ஐ.நா.சர்வதேச
தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் கணிப்புப்படி, உலக அளவில் 600 கோடி அலைபேசிகளுக்குச் சந்தாக்கள்
கட்டப்படுகின்றன. 230 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பன்வலை அமைப்புக்களைப் பயன்படுத்துகின்றனர்
என்று தெரிய வந்துள்ளது.