டிச.10,2011. 2012ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கியுப நாட்டிற்குத் திருப்பயணம்
மேற்கொள்ளவிருப்பதை உறுதி செய்துள்ள அதேவேளை, அவ்வாண்டை மரியா ஜூபிலி ஆண்டாக அறிவித்துள்ளனர்
கியுப ஆயர்கள். "La Caridad" எனப் பொதுவாக அழைக்கப்படும் கியுபாவின் பாதுகாவலியான
எல் கோப்ரே பிறரன்பு கன்னிமரியாவின் திருப்பயணியாகத் திருத்தந்தை அந்நாட்டிற்கு வருவார்
என்றும் ஆயர்கள் தெரிவித்தனர். இம்மாதம் 8ம் தேதி அமலமரி விழாவன்று மேய்ப்புப்பணி
அறிக்கை வெளியிட்ட கியுப ஆயர்கள், 2012ம் ஆண்டு சனவரி 7 முதல் 2013ம் ஆண்டு சனவரி 6 வரை
மரியா ஜூபிலி ஆண்டு என அறிவித்துள்ளனர். திருத்தந்தை கியுபாவிற்குத் திருப்பயணம்
மேற்கொள்ளும் தேதிகளைக் குறிப்பிடாத ஆயர்கள், திருத்தந்தையின் இத்திருப்பயணம், எல் கோப்ரே
பிறரன்பு கன்னிமரியா திருவுருவப் படம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிகழ்ச்சிகளின்
ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். 2012ம் ஆண்டு வசந்த காலத்தில் மெக்சிகோ
மற்றும் கியுபாவிற்குத் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத் திட்டங்கள் பரிசீலனையில்
இருப்பதாக முன்னதாகவே திருப்பீடம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.