2011-12-08 14:11:52

மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi வத்திக்கான் பிரதிநிதியுடன் சந்திப்பு


டிச.08,2011. மியான்மாரின் கத்தோலிக்க விசுவாசிகள் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்நாட்டின் ஒளியாகவும், சக்தியாகவும் திகழ வேண்டும் என்று கர்தினால் Renato Raffaele Martino கூறினார்.
மியான்மாரின் Yangon நகரில் அமைந்துள்ள புனித மரியா பேராலயம் தன் நூற்றாண்டு விழாவை இவ்வியாழனன்று சிறப்பித்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவையொட்டி, திருத்தந்தையின் சார்பில் அங்கு சென்றுள்ள கர்தினால் Martino இப்பெருவிழாத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் அந்நாட்டு விசுவாசிகளுக்கு இவ்வழைப்பை விடுத்தார்.
இத்திருப்பலியின்போது கர்தினால் Martino வழியாக Yangon பேராயருக்கும், விசுவாசிகளுக்கும் திருத்தந்தை வழங்கிய செய்தி வாசிக்கப்பட்டது.
இப்பெருவிழாத் திருப்பலிக்கு முன்னர், கர்தினால் Martino மற்றும் Yangon பேராயர் Charles Maung Bo இருவரையும் மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi தனியே சந்தித்து உரையாடினார்.
கத்தோலிக்க மக்கள் இந்த நாட்டில் குடியரசை அமைப்பதற்கு முக்கியமான பணியாற்ற வேண்டும் என்பதை எதிர் கட்சித் தலைவரின் இந்த சந்திப்பு உணர்த்துகிறது என்று பேராயர் Maung Bo இச்சந்திப்பிற்கு முன்னர் கூறினார்.
எதிர் கட்சித் தலைவர் Suu Kyiயும் அவருடன் வந்திருந்த ஏனைய அரசியல் தலைவர்களும் கர்தினால் Martino மறையுரையை முடிக்கும்வரை கோவிலில் தங்கியிருந்தனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.