2011-12-08 12:08:39

டிசம்பர் 09 வாழ்ந்தவர் வழியில்.... கவிஞர் சு. வில்வரத்தினம்


இலங்கையின் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 1950ம் ஆண்டில் பிறந்த சு.வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு.தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவர் 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படும் இவரது கவிதைகள் அனைத்தும் மொத்தமாக, “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்ற தொகுதியாக 2001ம் ஆண்டில் வெளியாகின. “மரணத்துள் வாழ்வோம்” என்ற தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka என்ற தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான சு. வில்வரத்தினம் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். இவரது “காற்றுவழிக் கிராமம்” என்னும் கவிதைத் தொகுதி 1995 ம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் திறமையையும் கொண்டிருந்தார். சு. வில்வரத்தினம் 1991 ம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் கொழும்பில் 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று தனது 56வது வயதில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது நாட்டுப் பற்றைப் பாராட்டி இவருக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.
அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985), காற்றுவெளிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995), காலத்துயர் (கவிதைத் தொகுதி), நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000), உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001), வாசிகம் (2006) ஆகிய நால்களை வெளியிட்டுள்ளார் கவிஞர் சு.வில்வரத்தினம்.







All the contents on this site are copyrighted ©.