ஊழல் என்ற புற்றுநோயை முற்றிலும் ஒழிப்பது ஒவ்வொருவரின் கடமை - ஐ.நா.பொதுச் செயலர்
டிச.08,2011. ஊழல் என்ற புற்றுநோயை வேரோடு தகர்த்து எறிவது உலகினர் ஒவ்வொருவரின் கடமையாகும்,
அதேநேரம் ஊழலைச் செய்பவர்கள் வெட்கத்துக்கு உரியவர்கள் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான்
கி மூன் கூறினார். டிசம்பர் 9ம் தேதி, இவ்வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக
ஊழல் ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இந்த ஊழலானது, அனைத்து
நாடுகளையும் பாதித்துள்ளது, அது சமூக முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருக்கின்றது, சமத்துவமின்மையையும்
அநீதியையும் அது பெற்றெடுக்கின்றது என்று கவலை தெரிவித்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களுக்கென
ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, ஊழல் செய்யும் நபர்களும் நிறுவனங்களும் திருடுவதால், ஏழைகள்
மற்றும் நலிந்தவர்களின் கல்வியும் நலவாழ்வும் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளும் இழக்கப்படுகின்றன
என்றும் அவரின் செய்தி கூறுகின்றது. ஊழல் என்ற புற்றுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு
நடத்தப்படும் போராட்டத்திற்கு, ஐ.நா.வின் ஊழல் ஒழிப்பு ஒப்பந்தம் சக்திமிக்க கருவியாக
இருந்து உதவி செய்கிறது என்றுரைக்கும் அவரின் செய்தி, இந்த ஒப்பந்தத்தை இன்னும் அமல்படுத்தாத
எல்லா அரசுகளும் அதனை உடனடியாக செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.