டிச 07, 2011. இத்தாலியின் உரோம் நகரில் புதன் கிழமைக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் ஏதாவது
நெருங்கிய தொடர்பு உண்டா என எவராவது ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் வழக்கமாக
வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தாலும் பெரும்பாலான புதன் கிழமைகள் சூரிய ஒளி தாங்கியதாகவே
இருக்கின்றன. இதுதான் இந்த வாரம் புதன் கிழமையும் நடந்துள்ளது. ஆம். கடந்த சில நாட்களாக
இருந்து வந்த மழைத்தூறலை இந்தப் புதனன்று உரோம் நகரில் காணமுடியவில்லை. இதனால், திருத்தந்தையின்
புதன் மறைபோதகத்தில் பங்கு பெற வந்த கூட்டமும் அதிகமாக இருக்க, திருத்தந்தை 6ம் பால்
மண்டபத்தில் திருப்பயணிகளைச் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிறிஸ்தவ
செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில், இயேசுவின் படிப்பினைகள் மற்றும் எடுத்துக்காட்டுக்கள்
குறித்து அண்மைப் புதன் கிழமைகளில் நோக்கி வருகிறோம் எனத் தன் இவ்வாரப் பொது மறைபோதகத்தைத்
துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, 'தந்தையே,
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்
இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனக் கூறிய வார்த்தைகளை மத்தேயு
மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். தூய ஆவியில் தந்தையுடன் ஆழ்ந்த ஐக்கியத்தில்
தன் மூலத்தைக் கொண்டுள்ளது இந்த உன்னதச் செபம். என்றும் நிலைத்திருக்கும் மகனாக இருக்கும்
இயேசு கிறிஸ்து ஒருவரே தந்தையை அறிவார், தந்தையின் விருப்பத்திற்குத் தன்னை முற்றிலும்
திறப்பதில் பேருவகை அடைகிறார். மேலும், 'தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு
வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'. தூய
மனதுடையோராகவும் இறைவிருப்பத்திற்குத் தங்களைத் திறந்தவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுடன்
இறைவன் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தன் விருப்பத்தை இச்செபத்தில் வெளிப்படுத்துகிறார்
இயேசு. தந்தையைப் புகழ்ந்து பாடும் வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு 'பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
ஆம்., என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என அழைப்பு விடுப்பதை மத்தேயு நற்செய்தியில்
வாசிக்கின்றோம். இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமும். அவர் வழியாக தூய
ஆவியில் நாம் நம்பிக்கையுடன் தந்தையாம் இறைவனை நோக்கித் திரும்ப முடியும். தந்தையின்
விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழி நாம் உண்மையான விடுதலையையும் அமைதியையும் கண்டுகொள்ள
முடியும் என்ற உறுதியுடன் அவரை நோக்கித் திரும்புவோம். இவ்வாறு தன் இவ்வாரப் புதன் பொது
மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, 1943ம் ஆண்டு வான்குண்டுவீச்சு மூலம் தகர்க்கப்பட்ட
இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள செக்கானோ என்ற ஊரின் புனித பேதுரு பங்குக் கோவில்
மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் 50 ஆண்டு நிறைவையும், தென்னாப்ரிக்காவில் மறைபோதகக்குரு
Michele D’Annucci கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தார்.
மறைப்போதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.