2011-12-05 14:46:31

திருத்தந்தையின் மூவேளை செப உரை


டிச.05,2011. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில் நம் வாழ்வை நேர்மையான முறையில் ஆய்வுச் செய்து, எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வுச் செய்யுமாறு புனிதத் திருமுழுக்கு யோவான் அழைப்பு விடுக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது உரோம் நகர் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து உரை வழங்கிய பாப்பிறை, நாம் செல்வந்தராகும்படி ஏழ்மையைத் தேர்ந்துகொண்ட இயேசுவின் வருகைக்கு தயாரிக்கும் நாம், ஒட்டகத் தோலாடையை உடுத்தி, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உண்ட புனிதத் திருமுழுக்கு யோவான், மனந்திரும்பிய வாழ்வுக்கு நமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிமடுப்போம் என்றார்.
நம் பாவங்களை ஏற்று, மனம் வருந்துவது, உள் மனமாற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும் என்ற மேலான ஓர் அழைப்பை திருமுழுக்கு யோவான் முன்வைக்கிறார் எனவும் கூறினார் பாப்பிறை.
குடியேற்றதாரர்களுக்கான உலக அவையின் 50ம் ஆண்டு விழா வரும் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெற உள்ளதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு துன்ப நிலைகளால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுடன் நாம் ஒருமைப்பாடு கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.