மியான்மார் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
டிச.01,2011. மியான்மாரின் யாங்கூனில் அன்னை மரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் தன்
நூற்றாண்டு விழாவை சிறப்பிப்பதையொட்டி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இம்மாதம் எட்டாம் தேதி அன்னைமரியின் அமல உற்பவ திருவிழாவன்று சிறப்பிக்கப்படும்
இந்த நூறாம் ஆண்டு கொண்டாட்டங்களில் பங்குபெற தன் பிரதிநிதியாக அந்நாட்டிற்கு அனுப்பப்படும்
கர்தினால் ரெனாத்தோ மார்த்தினோவிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் மியான்மார் மக்களுக்கு
தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. திருத்தந்தை புனித பத்தாம் பயஸின்
காலத்தில் இக்கோவில் திருநிலைப்படுத்தப்பட்டதையும், யாங்கூன் பேராயர் Charles Maung Boவின்
காலத்தில் இந்நாட்டு மக்கள் விசுவாசத்தில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதையும் பல்வேறு
மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் இடம்பெற்றதையும் தன் செய்தியில் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை. மியான்மாரின்
தலத்திருச்சபை அதிகாரிகள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினருக்கு தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்துள்ள திருத்தந்தை, மனித குலத்திற்கு நன்மையை விளைவிக்கும் மத சுதந்திரத்தின்
மேன்மை உணரப்படவேண்டும் என தான் ஆவல் கொள்வதாகவும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.