உலக AIDS நாளையொட்டி புது டில்லி பேராயர் Vincent Concessao
வழஙகிய செய்தி
நவ.30,2011. உலக AIDS நாளையொட்டி, ஐ.நா. விடுத்துள்ள 'பூஜ்யத்தை நெருங்குகிறோம்' என்ற
செய்தி நம்பிக்கையைத் தருகின்றது என்று புது டில்லி பேராயர் Vincent Concessao கூறினார். ஒவ்வோர்
ஆண்டும் கடைபிடிக்கப்படும் உலக AIDS நாள் டிசம்பர் 1ம் தேதி, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி,
'புதிதாக HIV பரவுவதில் பூஜ்யம், நோயுற்றோரை வேறுபடுத்துவதில் பூஜ்யம், AIDS தொடர்பான
மரணங்களில் பூஜ்யம் என பூஜ்யத்தை நெருங்குகிறோம்' என்ற மையக் கருத்துடன் ஐ.நா.வெளியிட்டுள்ள
செய்தியைப் பாராட்டி பேராயர் Concessao மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்திய கத்தோலிக்க
ஆயர் பேரவையின் மக்கள் நலவாழ்வு பராமரிப்பு துறையின் தலைவராகச் செயலாற்றும் பேராயர் Concessao
இப்புதனன்று வெளியிட்டுள்ள இம்மடலில் உலக AIDS நாளையொட்டி தன் கருத்துக்களைக் கூறியுள்ளார். பரிவு,
பராமரிப்பு ஆகிய உயரிய பண்புகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் ஒரு முன்னோடியாக
இருந்து வருகிறது என்பதை, தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ள பேராயர் Concessao, இந்தப்
பரிவும் பராமரிப்பும் HIV மற்றும் AIDS நோயுற்றோருக்கு மிக அதிகமாகக் காட்டப்பட வேண்டும்
என்று வலியுறுத்தியுள்ளார்.