2011-11-28 15:32:30

நவம்பர் 29 வாழ்ந்தவர் வழியில்.... கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்


தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாகர்கோவில் அருகேயுள்ள ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ம் தேதி பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராகத் தனது கலையுலக வாழ்வை துவக்கிய இவர், பின்னர் நாடகத் துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அவற்றையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள கலைவாணர், சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலைவாணரின் மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையைத் திரைப்படக் காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர் இவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்தாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். கலைவாணர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். இவர் கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது சொந்த வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவி செய்தவர். இவர் மகாத்மா காந்தியிடமும், அவரது வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.