2011-11-25 15:12:29

காங்கோ நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலையொட்டி ஆயர்கள் விடுத்த வேண்டுகோள்


நவ.25,2011. நவம்பர் 28, வருகிற திங்களன்று ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை தகுந்த மன நிலையோடு ஏற்கவும், வன்முறைகளைத் தூண்ட வேண்டாமென்றும் அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அந்நாட்டில் நடைபெறும் ஜனநாயக வழித் தேர்தலை மக்களும் தலைவர்களும் தகுந்த முறையில் நடத்தி முடிக்குமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்தேர்தலின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் அரசியல் சட்டங்களை மதிக்கிறவராகவும், மக்கள் நலனிலும், நாட்டு முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவராகவும் இருப்பதையே தான் விரும்புவதாக Kisangani பேராயர் Marcel Utembi கூறினார்.
உலகின் மிக வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் காங்கோவில் 1998க்கும் 2003க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்களால் 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இன்றும் அந்நாட்டில் பல்வேறு நோய்களுக்கு பலியாகும் மக்கள் ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கும் அதிகம். நாட்டின் 80 விழுக்காடு மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்ற தகவல்களை ICN என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனம் அளித்துள்ளது.
காங்கோ கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகள் கடந்த மாதம் பிரித்தானிய அரசுக்கு பயணம் மேற்கொண்டபோது, தங்கள் நாட்டில் சாவு கலாச்சாரத்தை வளர்த்து வரும் தலைவர்களையும், குழுக்களையும் குறித்து தங்கள் கவலைகளை வெளியிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.