எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நல்ல
பலனைத் தருகின்றன - ஐ.நா.
நவ.22,2011. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தி அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கு உலக அளவில்
எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நல்ல பலனைத் தருவதாக ஐ.நா.வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று
கூறுகிறது. “உலக அளவில் எய்ட்ஸ் நோய் 2011” என்ற தலைப்பில் ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு
அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1997ம் ஆண்டில் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை உச்சநிலையை எட்டியிருந்தது, ஆனால் இவ்வெண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இளையோர்,
குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழும் இளையோரின் பாலியல் நடவடிக்கைகள்
மாறியிருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. 2010ம் ஆண்டில் சுமார்
27 இலட்சம் பேர் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டனர் என்றும், இந்நோய் தொடர்பாக
அவ்வாண்டில் 7 இலட்சம் பேர் இறந்தனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. தற்போது
உலகில் 3 கோடியே 40 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். டிசம்பர் ஒன்றாந் தேதி உலக எய்ட்ஸ்
நோய் விழிப்புணர்வு தினமாகும்.