அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராகேல் பணிக்கு கர்தினால் Daniel
DiNardoவின் பாராட்டு
நவ.17,2011. கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் அமெரிக்க
ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராகேல் பணி என்ற கத்தோலிக்க முயற்சியைப் பாராட்டினார்
அந்நாட்டின் கர்தினால் Daniel DiNardo. இப்புதன் நிறைவுற்ற அமெரிக்க ஆயர்கள் பேரவையின்
மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் DiNardo, திருத்தந்தையால் அறிமுகம்
செய்யப்பட்டிருக்கும் புதிய மறைபரப்புப் பணியின் ஒரு முக்கிய அங்கமாக ராகேல் பணி அமையும்
என்று கூறினார். கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் தாங்கள் கடவுளால் இனி மன்னிப்பே
பெறப்போவதில்லை என்ற விரக்தி நிலையை அடைகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால்
DiNardo, இறைவனின் அளவற்ற அன்பிலும் அவர் அளிக்கும் மன்னிப்பிலும் இப்பெண்களை நம்பிக்கை
கொள்ளச் செய்வது திருச்சபையின் கடமை என்று கூறினார். கருகலைப்பு என்ற நிகழ்வினால்
பாதிக்கப்படுவது கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் மட்டுமல்ல, மாறாக, அப்பெண்ணின் குடும்பம்,
அப்பெண்ணின் கணவன், மற்றும் கருகலைப்பு செய்யும் மருத்துவர் என்ற ஒரு குழுவே பாதிப்புக்கு
உள்ளவதால், ராகேல் பணியின் மூலம் இவர்கள் அனைவருக்குமே தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்
என்று கர்தினால் DiNardo இப்பணியைக் குறித்து விளக்கினார்.