அகிலஉலக சகிப்புத்தன்மை நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வெளியிட்ட செய்தி
நவ.17,2011. சகிப்புத்தன்மை என்பது செயலற்ற நிலை அல்ல, மாறாக, செயலாக்கம் மிகுந்த ஒரு
முயற்சி என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். நவம்பர் 16 இப்புதனன்று
கடைபிடிக்கப்பட்ட அகிலஉலக சகிப்புத்தன்மை நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன்,
பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பெருமளவு மாற்றங்கள் உருவாகி, மக்கள் நாடுவிட்டு நாடுசெல்லும்
சூழல்கள் அதிகமாகியுள்ள இவ்வுலகில், சகிப்புத் தன்மை மக்களிடையே ஆக்கப்பூர்வமான வழிகளில்
வளர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்பு எப்போதும் காணாத வகையில் நமது உலகம்
இப்போது ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் நிலையில் உள்ளதால், சகிப்புத்தன்மை என்பது
இனி ஒருவரது விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டதல்ல, மாறாக, இது உலகெங்கும் நிலவ வேண்டிய
ஒரு கட்டாயச் சூழல் என்று பான் கி மூன் தெளிவுபடுத்தினார். சகிப்புத்தன்மையின் மூலம்
உலகில் வளரும் கலாச்சாரங்கள் மக்களை இன்னும் செறிவு நிறைந்த எண்ணங்களிலும், மன நிலையிலும்
வளர்க்கும் என்று UNESCO நிறுவனத்தின் இயக்குனர் Irina Bokova கூறினார்.