நேபாளத்தில் ஒதுக்கப்பட்ட பழங்குடி இனத்தவர்க்கெனக் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது
நவ.15,2011. நேபாளத்தின் மலைப்பகுதியில் வாழும் Chepang என்ற மிக ஏழைப் பழங்குடி இனத்தவர்க்கெனப்
புதிய கத்தோலிக்கப் பள்ளி ஒன்றைத் திறந்துள்ளது தலத்திருச்சபை. “வாழ்வில் நிறைவடையக்
கற்றல்” என்ற விருதுவாக்குடன் தொடங்கப்பட்டுள்ள நவோதயா என்ற இந்தப் பள்ளியை இச்சனிக்கிழமை
திறந்து வைத்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, இதனைக் கட்டுவதற்கு உதவிய உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 59 பழங்குடி
இனங்களில் ஒன்றான Chepang இனத்தில் சுமார் 52 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள், நகரங்களுக்கும்
முக்கிய சாலைகளுக்கும் தொலை தூரத்தில் கடல் மட்டத்திற்கு 4,500 அடி உயரமான மலைப்பகுதியில்
வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்க்கை, காடுகளைச் சார்ந்தே உள்ளது.