சுனாமியால் பாதிக்கப்பட்ட Sendai நகரில் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்க ஆயர்களின்
ஆண்டு கூட்டம்
நவ.14,2011. ஜப்பானில் நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் பேரழிவுகளைச் சந்தித்த Sendai
நகரில் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தை அண்மையில்
நடத்தினர். ஜப்பான் நாட்டுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதர் பேராயர்
Joseph Chennoth மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர்
சுனாமியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டார். ஆயர்களின் இந்த ஆண்டு
கூட்டத்தின் இரண்டாம் நாளன்று, திருப்பீடத் தூதர் பேராயர் Chennoth, Sendai நகர மேயர்
Emiko Okuyamaவைச் சந்தித்து, ஒரு மில்லியன் யென், அதாவது, 13,000 டாலர்கள் நிதியை வழங்கினார். 20
கொரிய ஆயர்களும், 17 ஜப்பானிய ஆயர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அளிக்கப்பட்டு வரும் உதவிகள், அணுசக்தி பயன்பாடு, மற்றும் கொரியாவில் மேற்கொள்ளப்பட்டு
வரும் நான்கு நதித் திட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று UCAN செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.