2011-11-10 16:19:34

கொத்து வெடிகுண்டுகளை முற்றிலும் அழிப்பதற்கு இயேசு சபையினர் முழு ஆதரவு


நவ.10,2011. கொத்து வெடிகுண்டுகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிக்கைக்கு இயேசு சபையினர் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்து, அவ்வறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
ஜெனீவாவில் நவம்பர் 14, வருகிற திங்கள் முதல் நவம்பர் 25 வரை நடக்கவிருக்கும் CCCW, அதாவது, பாரம்பரிய ஆயுதங்கள் பற்றிய நான்காவது மறுபரிசீலினைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் இவ்வறிக்கையை ஆதரித்து JRS என்று அழைக்கப்படும் இயேசு சபையினரின் அகதிகள் பணிக்குழு கையொப்பாம் இட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மக்களின் உயிர்களையும், உறுப்புக்களையும் பறித்துவரும் இந்த ஆயுதங்களை உலகிலிருந்து முற்றிலும் அழிப்பதற்கு ஐ.நா. அமைப்பும் இன்னும் பிற மனிதாபிமான அமைப்புக்களும் இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கம்போடியாவில் JRS பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Javi Olaguivel கூறினார்.
கண்ணி வெடிகள், கொத்து வெடிகள் ஆகியவை கம்போடிய மக்களின் தினசரி வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன என்றும், பள்ளிக் குழந்தைகள் நடமாடும் இடங்களுக்கு அருகிலும் இதுபோன்ற வெடிகளை இன்றும் காணலாம் என்றும் அருள்தந்தை Olaguivel சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.