மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்டாண்ட் என்று அழைக்கப்பட்ட
கிறிஸ்தவ சபையின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியுமாக அறியப்படும் மார்ட்டின்
லூத்தர் 1483ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். மதம் சார்ந்த அதிகாரம்
விவிலியம் மட்டுமே எனும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்கு சவால் விடுத்தார்.
அன்றைய திருச்சபையின் கோட்பாடுகளை, பல நியதிகளை எதிர்த்தார். இதனால் திருச்சபையிலிருந்து
விலக்கி வைக்கப்பட்டார். இவரைப் பின்பற்றுபவர்கள் லூத்தரன் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். 1522ம்
ஆண்டு முதன் முதலாக புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். அவரும் அவரின் நண்பர்களும்
இணைந்து 1534ம் ஆண்டு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டனர். ஜெர்மன் மொழிப்பற்று
அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழி பெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து
கொள்ளும் அளவுக்கு இம்மொழி பெயர்ப்பு இருந்ததாலும் இது, பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1546ம் ஆண்டு பிப்ரவரி 18ம் நாள் காலமானார் மார்ட்டின் லூத்தர்.