2011-11-09 14:47:01

எழுநூறு கோடியைத் தாண்டிப் பிறந்த குழந்தை கடவுளின் கொடை - வத்திக்கான் அதிகாரி


நவ.09,2011. இவ்வுலகில் எழுநூறு கோடியைத் தாண்டிப் பிறந்த குழந்தையே, நீ எங்கு பிறந்திருந்தாலும் சரி, நீ ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்திருந்தாலும் சரி, நீ உண்மையிலேயே உலகிற்குக் கிடைத்துள்ள கடவுளின் கொடை, நீ ஒரு அற்புதம், வருக, வருக என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்டோபர் மாத இறுதியில் உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிய செய்தியைப் பல்வேறு உலக நிறுவனங்கள் கவலைகளுடன் கூறிவந்த வேளையில், வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளராகப் பணிபுரியும் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி Octava Dies என்ற வார நிகழ்ச்சியில் 700 கோடியைத் தாண்டிப் பிறந்த முதல் குழந்தையை மகிழ்வுடன் வரவேற்றுப் பேசினார்.
பிறந்துள்ள இந்தக் குழந்தையிடம் நேரடியாகப் பேசுவது போல் இந்த வார நிகழ்ச்சியில் அமைந்திருந்த அவர் கூற்றுக்களில், இக்குழந்தைக்கு இவ்வுலகம் சரியான ஓர் இடத்தை தயாரித்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அண்மையில் நடந்து முடிந்த G20 நாடுகளின் உச்சி மாநாட்டையும் தன் எண்ணங்களில் இணைத்துப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, 700 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டிப் பிறந்த இந்தக் குழந்தையும் இதற்குப் பின் பிறந்துள்ள, இன்னும் பிறக்கப்போகும் குழந்தைகள் அனைவருமே நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் 800 கோடியைத் தாண்டிப் பிறக்கும் குழந்தையை இவ்வுலகில் வரவேற்க வேண்டியிருக்கும் என்று தன் எண்ணங்களை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.