அக்டோபர் மாத இறுதியில், உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்
அக்.27,2011. இன்னும் நான்கு நாட்களில், அதாவது, அக்டோபர் மாத இறுதியில், உலகின் மக்கள்
தொகை 700 கோடியைத் தாண்டும் வேளையில், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வருங்காலத் தலைமுறையைப்
பாதிக்கும் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது. உலகின் இளையத்தலைமுறையினர் கல்வியிலும்,
நல வாழ்விலும் முன்னேறும் அனைத்து வழிகளையும் இவ்வுலகம் கண்டு, தேவையான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும் என்று இப்புதனன்று ஐ.நா. வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது. உலகின்
பல பகுதிகளில், பல வழிகளில் நிலவும் பொருளாதாரத் தடைகள், சமுதாயத் தடைகள் அனைத்தையும்
தகர்த்து, குழந்தைகள், இளையோர், மற்றும் பெண்கள் சம உரிமைகளுடனும், சம மதிப்புடனும் வாழ்வதற்கான
வழிகளை அனைத்து அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி Babatunde
Osotimehin கூறினார். 700 கோடியைத் தாண்டும் உலக மக்கள் தொகையில் 180 கோடிக்கும் மேலானோர்
10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய ஐ.நா.வின் உயர் அதிகாரி,
இவர்கள் நல்ல முறையில் வளர்ந்தாலே இவ்வுலகம் வளம் பெற முடியும் என்பதை வலியுறுத்திக்
கூறினார்.