அக்டோபர் 27, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........, கே.ஆர். நாராயணன்
கே.ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் இராமன் நாராயணன் இந்தியாவின் 10வது குடியரசுத்
தலைவர். கேரளாவின் உழவூர் கிராமத்தின் பெரும்தானம் எனுமிடத்தில் 1920ம் ஆண்டு அக்டோபர்
27ம் தேதி மிகுந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராய்,
இலண்டன் பல்கலைக்கழகம் வரைச் சென்று பயின்றார். இந்தியப் பிரதமர் நேரு விடுத்த அழைப்பின்பேரில்
இந்திய வெளியுறவுத்துறையில் இணைந்த இவர், ஜப்பான், பிரிட்டன், தாய்லாந்து, துருக்கி,
சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்திற்கிணங்க அரசியலிலும் புகுந்த இவர், மும்முறை
லோக் சபாவுக்கு போட்டியிட்டு வெற்றியும் கண்டார். பிரதமர் இராஜீவ் காந்தியின் அமைச்சரவையில்
அமைச்சராகவும் பணியாற்றினார். 1992ம் ஆண்டு இந்தியத் துணைக்குடியரசுத் தலைவராகவும், 1997ல்
குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியப் பொதுத்தேர்தலில் ஓட்டுச் சாவடிக்குச்
சென்று வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவின்
10வது குடியரசுத்தலைவரான கே.ஆர். நாராயணன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி டெல்லியில்
காலமானார்.