அக்.24,2011. ஆசிய ஆயர் பேரவையின் புதியத் தலைமைச் செயலராக மும்பை பேராயர் கர்தினால்
ஆஸ்வால்ட் கிரேசியஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் பாங்காக்கில் ஆசிய ஆயர்
பேரவையின் மத்திய அவை கூடியபோது, கர்தினால் கிரேசியஸ் தேர்ந்தெடுக்கபட்டார். தற்போது
இந்திய ஆயர் பேரவையின் தலைவராக பணிபுரியும் கர்தினால் கிரேசியஸ், வரும் ஆண்டு சனவரி முதல்
நாளிலிருந்து ஆசிய ஆயர் பேரவையின் இந்தப் புதிய பொறுப்பையும் மேற்கொள்வார். இவருக்கு
முன்னதாக இப்பொறுப்பில் பணிபுரிந்து வரும் பிலிப்பின்ஸ் பேராயர் Orlando Quevedoவின்
ஆறு ஆண்டு பணிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியன்று முடிவடைகிறது. கர்தினால்
கிரேசியஸ் ஆசிய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக் குழுவின் தலைவராக ஏற்கனவே 6 ஆண்டுகள்
பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.