மத்திய கிழக்கில் சமய சுதந்திரமும் மனித உரிமைகளும் மதிக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர்
அழை
அக்.22,2011. மத்திய கிழக்கு நாடுகள் சமய சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் மதிக்கப்படவும்
ஆதரவு வழங்காவிடில், அரபு வசந்தம் என அழைக்கப்படும் தற்போதைய அரபு நாடுகளில் எழுந்துள்ள
மக்கள் எழுச்சி அரபுக் குளிர்காலமாக மாறிவிடும் என்று லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்க
முதுபெரும் தலைவர் பெக்காரா ராய் எச்சரித்தார். வட ஆப்ரிக்கா மற்றும் பிற அரபு நாடுகளில்
இவ்வாண்டில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன என்றும்,
தலைவர்கள் அரசையும் மதத்தையும் பிரிக்கும் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும் முதுபெரும்
தலைவர் ராய் கூறினார். இந்த நாடுகளில் சுதந்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மனித
உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்கள் அமலில் இருப்பதையும் தாங்கள் பார்க்க விரும்புவதாகவும்
அவர் கூறினார். இந்த மதிப்பீடுகள் செயல்படுத்தப்படாவிட்டால் ஈராக்கில் இடம் பெறுவது
போல இந்நாடுகளிலும் உள்நாட்டுப் போர்கள் வெடிக்கும் எனவும் அதிகத் தவீரவாத அரசியலுக்கு
இட்டுச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார். ஐந்து இலட்சம் பாலஸ்தீனிய அகதிகளால் லெபனனில்
தாங்கள் துன்பம் அனுபவித்ததையும் 1975ம் ஆண்டில் லெபனனில் பாலஸ்தீனியர்களோடு சண்டை தொடங்கியது
என்பதையும் லெபனன் கத்தோலிக்கத் தலைவர் நினைவுகூர்ந்தார். மத்திய கிழக்கு நாடுகளில்
இசுலாமியர் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் தங்களது மதிப்பீடுகளால்
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.