மரண தண்டனை சட்ட ரீதியான கொலை - இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
அக்.20,2011. மரண தண்டனை நிறைவேற்றுவது சட்ட ரீதியான கொலை என்று இந்திய உச்ச நீதிமன்ற
முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார். இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனையை அறிவித்த நீதிபதிகள்
குழுவுக்குத் தலைமை தாங்கிய, 74 வயதாகும் முன்னாள் நீதிபதி தாமஸ், மரண தண்டனை, தண்டனையே
அல்ல என்று கூறினார். கோட்டயத்தில் IANS செய்தி நிறுவனத்திற்குத் தொலைபேசி பேட்டியளித்த
தாமஸ், மரண தண்டனை நிறைவேற்றுவது, சமுதாயத்தின் பாதுகாப்போடு வழங்கப்படும் சட்டரீதியான
கொலையாகும் என்றார். கொச்சின் மற்றும் திருவாங்கூரில் 1940களில் மரண தண்டனை இரத்த
செய்யப்பட்ட காலத்தில் நடந்த கொலைக் குற்றங்களைவிட 1950 களில் அது மீண்டும் அமல்படுத்தப்பட்ட
காலங்களில் கொலைகள் அதிகம் நடந்தன என்பதையும் தாமஸ் குறிப்பிட்டார்.