அக்டோபர் 17. வாழ்ந்தவர் வழியில்..... திருத்தந்தை முதலாம் ஜான் பால்
திருச்சபை வரலாற்றில் 20ம் நூற்றாண்டில் பிறந்து அதே நூற்றாண்டில் உயிரிழந்த ஒரே திருத்தந்தை
முதலாம் ஜான் பால். 1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெனிஸ் நகரில் அல்பினோ லூச்சியானி
என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ஓர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைமாவட்ட குருமடத்தில்
இணைந்த இவர், உயர் குருமடத்தில் பயின்று கொண்டிருந்த போது இயேசுசபையில் இணைய விரும்பினார்.
ஆனால் அக்குருமட அதிபரோ அதற்கு அனுமதி தர மறுத்ததால், மறைமாவட்ட குருத்துவப் பயிற்சியைத்
தொடர்ந்து மேற்கொண்டு 1935ல் குருவானார். தான் படித்த அதே குருமடத்தில் பேராசிரியராகவும்
துணை அதிபராகவும் பணியில் இணைந்த இவர், உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில்
இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பி அங்கு படிக்கச் செல்ல விரும்பினார். ஆனால் இவர்
படிக்கும்போதே கல்வி கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விரும்பினர். கிரகோரியன்
பல்கலைக்கழகமோ, இவர் உரோம் நகரில் வந்து ஓர் ஆண்டாவது கல்லூரியில் படிக்க வேண்டும் என்றது.
இவ்வளவு முக்கிய பேராசிரியரை இழக்க விரும்பாத வெனிஸ் குருமடத்திற்காக இந்தச் சிக்கலில்
நேரடியாக தலையிட்டு, அங்கேயிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர
சிறப்பு அனுமதி அளித்தார் பாப்பிறை 12ம் பயஸ். 1958ம் ஆண்டு குரு லூச்சியானியை ஆயராக
அறிவித்து, அவரை திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 23ம் ஜான். அதே திருத்தந்தை கூட்டிய
இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார் ஆயர் லூச்சியானி.
1970ல் வெனிஸ் பேராயராகவும் முதுபெரும் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட இவரை 1973ல்
கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை 6ம் பால். 1978ல் இவர் திருத்தந்தையாக தெர்ந்தெடுக்கப்பட்டபோது,
தன்னை ஆயராக திருநிலைப்படுத்திய மற்றும் கர்தினாலாக உயர்த்திய இரு முன்னாள் திருத்தந்தையர்களை
கௌரவிக்கும் விதமாக முதலாம் ஜான் பால் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். வெனிஸ் நகரோடு நெருங்கிய
தொடர்புடையதிருத்தந்தையர் பத்தாம் பத்திநாதர், அருளாளர் 23ம் ஜான், முதலாம் ஜான் பால்
ஆகியோர் வெனிஸ் மறைமாவட்ட முதுபெரும் தந்தையராய் இருந்த போது பாப்பிறைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
மேலும், திருத்தந்தையர் 12ம் கிரகரி, 4ம் யூஜின், 2ம் பவுல், 7ம் அலெக்சாண்டர், 8ம் கிளமென்ட்
ஆகியோரும் வெனிஸ் நகரைச் சேர்ந்தவர்கள். 33 நாட்களே பதவியில் இருந்தாலும் தன் எளிமையான
நடவடிக்கைகளாலும், புன்னகையாலும், அனைவரையும் கை நீட்டி வரவேற்கும் பண்பாலும் உலகையே
கவர்ந்தார் இத்திருத்தந்தை. உலகின் ஒவ்வொரு கோவிலின் வருமானத்திலும் ஒரு விழுக்காடு மூன்றாம்
உலக நாடுகளின் ஏழைத் திருச்சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்ற விதியைத் துவக்கியவர் இவரே.
எதைச்சொன்னலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக 'நாம்' என்ற பதத்தையே அனைத்துத் திருத்தந்தையர்களும்
பயன்படுத்திக் கொண்டிருக்க அதனை 'நான்' என்று முதன் முதலில் பயன்படுத்தியவர் இவரே. திருத்தந்தையர்களின்
பெயரில் முதலில் இரட்டைப் பெயரைப் பயன்படுத்தியவர் இவரே. பல்வேறு சீர்திருத்தங்களை திருச்சபையில்
கொணர்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எளிமையான திருத்தந்தை முதலாம் ஜான்
பால், தான் பதவியேற்ற 33 நாட்களில் அதாவது 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி மாரடைப்பால்
காலமானார்.