2011-10-15 14:47:10

கிறிஸ்தவர்கள், மனித மாண்பை உயர்த்திக் காட்டும் மதிப்பீடுகளை வளர்க்கத் திருத்தந்தை வேண்டுகோள்


அக்.15,2011. இன்று கடவுளின் படைப்புப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்கும் அழைப்பை ஏற்றுள்ள மனிதன், அந்தத் தனது அழைப்பைச் செயல்படுத்துவதற்கு குடும்பமும் வேலையும் சாதகமான இடங்களாக இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“Centesimus Annus Pro Pontifice” என்ற அமைப்பின் சுமார் 300 பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நற்செய்திப் பணியில் குடும்பங்களின் முக்கியமான பங்கை எடுத்துரைத்தார்.
வேலையிலும் பொருளாதாரத்திலும் இக்காலத்தில் நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குடும்பங்களைத் தாக்கி சமூக வாழ்விலும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே ஒரு நல்லிணக்கமான நிலைமை உருவாக வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இன்றைய உலகு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில், கிறிஸ்தவர்கள், தீமைகளைக் கண்டித்து மனித மாண்பை உயர்த்திக் காட்டும் மதிப்பீடுகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
உழைக்கும் வர்க்கம் குறித்து பாப்பிறை 13ம் லியோ 1891ம் ஆண்டில் வெளியிட்ட Rerum Novarum என்ற திருமடலின் நூறாவது ஆண்டு நினைவாக, அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் 1991ம் ஆண்டில் Centesimus Annus அதாவது நூறாவது ஆண்டு என்ற தலைப்பில் எழுதியது பற்றிக் குறிப்பிட்டு, கடந்த 120 ஆண்டுகளில் திருச்சபையின் சமூகப் போதனைகள் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கானில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் “Centesimus Annus Pro Pontifice” என்ற அமைப்பில் வணிகர்கள் கல்வித்துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பொதுநிலையினரால் நடத்தப்படும் இவ்வமைப்பிலுள்ள இவர்கள் "புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்குத்" திருத்தந்தைக்கு உதவி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.