உலகளாவியப் பசிக்கொடுமையின் மூல காரணங்கள் களையப்படுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை
- FAO
அக்.15,2011. உலகில் சிறாருக்குப் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது. அக்டோபர்
16ம் தேதி, இஞ்ஞாயிறன்று உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு கூறிய அந்நிறுவனம்,
உலகில் நிலவும் பசிக்கொடுமையின் மூல காரணங்கள் களையப்படுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள்
தேவைப்படுகின்றன என்று கூறியது. உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் வளரும் நாடுகளில்
உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் FAO கூறியது. இந்த
விலைவாசி ஏற்றமானது, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் மேலும் சுமார் 7 கோடிப் பேரை வறுமைக்
கோட்டிற்குக் கீழ் வைக்கும் என்று உலக வங்கியும் கூறியுள்ளது. “உணவு விலைகள் : நெருக்கடியிலிருந்து
உறுதியான நிலைக்கு” என்ற தலைப்பில் இவ்வுலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.