2011-10-15 14:55:14

இந்தியாவில் புதிய அணுமின் நிலையங்கள் வேண்டாம் எனக் கோரி வழக்கு


அக்.15,2011. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டம் தொடரும் நிலையில், இந்தியாவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல்.ராமதாஸ் உள்பட 13 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறின.
அரசு மற்றும் அணுசக்தி அமைப்பு சாராத சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து, தற்போதுள்ள மற்றும் உத்தேச அணுசக்தி நிலையங்கள், யுரேனிய சுரங்க வசதிகள் மற்றும் பிற அணுசக்தி எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், நலவாழ்வு, பாதுகாப்பு குறித்தும், மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடுகையில் அணுசக்தி மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆய்வுகள், சிக்கனத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, உத்தேச அணுமின் நிலையங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.