ரியோ டி ஜெனீரோவில் இருக்கும் மீட்பராம் கிறிஸ்துவின் திரு உருவம் 80 ஆண்டு நிறைவு
அக்.13,2011. பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோவில் இருக்கும் மீட்பராம் கிறிஸ்துவின்
திரு உருவம் நிறுவப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, அந்நாட்டு மக்கள் பல்வேறு
கொண்டாட்டங்களில் இப்புதனன்று ஈடுபட்டனர். பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும்
பெருமை தரும் இந்தத் திரு உருவம், தன் கைகளை விரித்து மற்றவர்களை அழைப்பதுபோல், இந்நாட்டு
மக்களும் அனைவரையும் வரவேற்கும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று ரியோவின் பேராயர் Orani
João Tempesta கூறினார். 1922ம் ஆண்டு ஆரம்பமான இத்திரு உருவின் கட்டுமானப் பணிகள்
1931ம் ஆண்டு நிறைவு பெற்று, அவ்வாண்டு அக்டோபர் 12ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. 130
அடி உயரமும், கிறிஸ்துவின் விரிக்கப்பட்ட இரு கரங்களுக்கிடையே 98 அடி அகலமும் உடைய இத்திரு
உருவம், 635 டன் எடையுள்ளது. ரியோ நகரை நோக்கியவண்ணம் அமைந்துள்ள இந்தத் திரு உருவம்,
உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதனன்று
80ம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இளையோர், 2013ம் ஆண்டு தங்கள் நகரில் நடைபெற
உள்ள உலக இளையோர் நாளையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.