அக்.13,2011. அடுத்த சில மாதங்களில் அமெரிக்க அரசு ஈராக்கிலிருந்து தன் படைகளை விலக்கிக்
கொள்ளவிருப்பதால், அங்கு வன்முறைகள் வளராமல் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பு உருவாக
வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்க ஆயர் பேரவையின்
சார்பில் ஈராக்கை அண்மையில் பார்வையிடச் சென்றிருந்த அமெரிக்க ஆயர்கள் இருவர், அந்நாட்டில்
வாழும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளையும், சவால்களையும் குறித்து செய்தியாளர்களிடம்
பேசுகையில் இவ்விதம் கூறினர். கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் நகரில் 58
பேரின் இறப்புக்குக் காரணமான தாக்குதல் நடைபெற்ற அன்னை மரியாவின் கத்தோலிக்கக் கோவிலைத்
தங்கள் ஈராக் பயணத்தின்போது தரிசித்தது ஓர் உயர்ந்த அனுபவமாக இருந்தது என்று அரிசோனா
ஆயர் Gerald Kicanas கூறினார். ஈராக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்ற போர், மற்றும் அந்நாட்டின்
மீது சுமத்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றாலும், அவர்களிடையே நிலவும் நம்பிக்கையும், அந்நாட்டில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள
பிறரன்புப் பணிகளும் பெரிதும் போற்றுதற்குரியது என்று ஆயர் Kicanas மேலும் கூறினார்.