அக்.08,2011. இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் 2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரைத் திட்டமிட்டுள்ள
மேய்ப்புப்பணி முன்னெடுப்புக்கள் பற்றித் திருத்தந்தை மற்றும் வத்திக்கான் அதிகாரிகளுடன்
கலந்து பேசி வருகின்றனர். CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் உயர்மட்ட
அதிகாரிகள், தங்களது மேய்ப்புப்பணித் திட்டங்கள் பற்றிக் கலந்து பேசுவதற்கு இவ்வெள்ளிக்கிழமை
திருத்தந்தையைச் சந்தித்தனர். இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் கத்தோலிக்கரின்
மறைப்பணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஆயர்கள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து அப்பகுதி
ஆயர்கள் கலந்து பேசி வருகின்றனர். இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் மத்தியில் கணனியையும்
பிற தொழிற்நுட்பங்களையும் பயன்படுத்தி நற்செய்தியைப் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கு உதவியாக
1980களின் இறுதியில் திருப்பீட சமூகத் தொடர்பு அவையும் CELAM அமைப்பும் இணைந்து புதிய
வலை அமைப்பை உருவாக்கியது. RIIAL என்ற பெயரிலான அந்தப் புதிய அமைப்பு, www.episcopo.net
என்ற புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கவிருக்கின்றது. இப்புதிய இணையதளம், சிலே நாட்டு சந்தியாகோவில்
இம்மாதம் 17 முதல் 19 வரை நடைபெறும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.