2011-10-07 14:45:11

ஸ்டீவ் ஜாப்ஸ் சிலிக்கன் பள்ளத்தாக்கு புரட்சிக்கு வித்திட்டவர் – வத்திக்கான் நாளிதழ்


அக்.07,2011. உறவுகளையும், தொடர்புகளையும் வளர்க்கும் வண்ணம் திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் வத்திக்கான் வானொலியையும், வத்திக்கான் இரயில் நிலையத்தையும் அமைத்ததுபோல், Apple நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராய் இருந்தார் என்று இயேசு சபை அருள் பணியாளர் அந்தோனியோ ஸ்பதாரோ (Antonio Spadaro) கூறினார்.
அக்டோபர் 5ம் தேதி, இப்புதனன்று தன் 56வது வயதில் காலமான ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி, இயேசு சபையினர் நடத்தும் La Civiltà Cattolica என்ற மாத இதழின் ஆசிரியரான அருள்தந்தை ஸ்பதாரோ வத்திக்கான் வானொலிக்கு இவ்வியாழனன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
வாழ்க்கையை, ஒவ்வொரு நாள் அலுவல்களின் தொகுப்பாக மட்டும் காணாமல், குறிக்கோளுடன் கனவுகளுடன் வாழ்வதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் விட்டுச் சென்ற சிந்தனைகளை தன் பேட்டியில் தெளிவுபடுத்தினார் அருள்தந்தை ஸ்பதாரோ.
மேலும், வத்திக்கானில் இருந்து வெளியாகும் L’Osservatore Romano நாளிதழில் இவ்வெள்ளியன்று வெளியாகியுள்ள ஒரு செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸ் சிலிக்கன் பள்ளத்தாக்கு புரட்சிக்கு எவ்வகையில் வித்திட்டார் என்றும், நாம் பயன்படுத்தும் கருவிகளில் மட்டுமல்லாமல், நமது சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றிலும் நாம் புரட்சிகளை கொணர வேண்டும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முன்னோடி என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.