2011-10-07 14:43:07

பள்ளிகள் நம்பிக்கையின் இடங்கள் - திருச்சபை அதிகாரி


அக்.07,2011. இக்காலத்திய உலகளாவிய நெருக்கடி நிலைமை, வருங்காலத்திற்கு முன்வைக்கும் சவால்கள் குறித்துப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டி வரும்வேளை, கத்தோலிக்கத் திருச்சபை பள்ளிகளை நம்பிக்கையின் இடங்களாக நோக்குகின்றது என்று திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.
இஸ்பெயின் நாட்டு சரகோசாவில் இம்மாதம் 18 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் கத்தோலிக்கக் கல்வி குறித்த 17வது அனைத்துலக மாநாடு பற்றிப் பேசிய, சர்வதேச கத்தோலிக்கக் கல்வி அலுவலகப் பொதுச் செயலர் அருட்பணி Angel Astorgano இவ்வாறு கூறினார்.
“பள்ளி, மனித உரிமைகளுக்கான நம்பிக்கையின் இடம்” என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டில், சுமார் 4 கோடியே 40 இலட்சம் மாணவர்கள் சார்பாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய 600 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
IOCE என்ற சர்வதேச கத்தோலிக்கக் கல்வி அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டு Lucerneல் 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அரசு-சாரா அலுவலகத்தின் பொதுத் தலைமையகம் பெல்ஜிய நாட்டு Brussels ல் உள்ளது. இது 102 நாடுகளில் 2 இலட்சத்து 10 ஆயிரம் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.