2011-10-07 14:40:47

திருத்தந்தையின் அழைப்பையடுத்து, பாப்பிறை பிறரன்பு அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்


அக்.07,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தற்போது நிலவும் பட்டினிக்கொடுமை, வறட்சியால் உருவான ஒரு பிரச்சனை என்றாலும், இந்தப் பிரச்னைக்கு மனிதர்களின் செயல்பாடுகளும் முக்கிய காரணம் என்று அகில உலக காரித்தாஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறையை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் குறிப்பிட்டுப் பேசுகையில், அந்த வளாகத்தில் திருத்தந்தையைச் சந்திக்கக் காத்திருந்த அகில உலக காரித்தாஸ் மனிதாபிமான செயல்களை ஒருங்கிணைக்கும் இயக்குனர் Alistair Dutton, திருத்தந்தையைச் சந்தித்தபின் இவ்வாறு கூறினார்.
Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜார்ஜியோ பெர்ட்டின், மற்றும் காரித்தாசின் பல்வேறு அதிகாரிகளும் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்து, ஆப்ரிக்காவில் காரித்தாஸ் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளைப் பற்றி திருத்தந்தையிடம் எடுத்துக் கூறினர்.
அகில உலக காரித்தாஸ் அமைப்பு தற்போதைய நிலையில் ஆப்ரிக்காவில் 5 இலட்சம் மக்களுக்கு 3 கோடி யூரோ, அதாவது, ஏறக்குறைய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவு உதவிகளைச் செய்து வருகிறது என்று காரித்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை விடுத்த அழைப்பையடுத்து, Cor Unum என்ற பாப்பிறை பிறரன்பு அவை அக்டோபர் 7 இவ்வெள்ளியன்று ஆப்ரிக்காவின் பிரச்சனையைக் குறித்து கலந்து பேச ஒரு கூட்டத்தை வத்திக்கானில் ஏற்பாடு செய்துள்ளது. காரித்தாஸ் உட்பட, பல கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.